சினிமா செய்திகள்

'தாய் கிழவி' படத்துக்கு பிறகு கிழவி கதைகளாக வருகிறது - நடிகை ராதிகா கலகலப்பு

சினிமாவில் வெற்றிகளும், தோல்விகளும் சகஜம் என்று நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து, சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த 'தாய் கிழவி' படம் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது. படத்தின் வெற்றியை படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ராதிகா சரத்குமார் கூறும்போது, "சினிமா ஒரு ஜாலியான இடம். இங்கு வெற்றிகளும், தோல்விகளும் சகஜம். இங்கு நான் எதையும் சீரியசாக எடுத்துக்கொள்ள மாட்டேன். சிவகார்த்திகேயன் ஒரு நல்ல தயாரிப்பாளர். எல்லா விஷயத்திலும் 'அப்டேட்' ஆக இருக்கிறார்.

'தாய்கிழவி' படத்துக்கு பிறகு, 6 பேர் என்னிடம் கதை சொல்லிவிட்டார்கள். அத்தனையும் கிழவி கதை தான். ஒருவகையில் யோசிக்க வைத்தாலும், இந்த படம் எனக்கு பெருமையைத் தேடி கொடுத்திருக்கிறது.

Also read:திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு

ஹீரோக்கள் போல ஹீரோயின்களுக்கு ஏன் சம்பளம் தரமாட்டேங்கிறீர்கள்? என்று நடிப்பதற்கு முன்பாகவே சிவகார்த்திகேயனிடம் கேட்டேன். தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஒரு கதாநாயகிக்கு படத்தின் லாபத்திலும் பங்கு தரப்படும் என்றார். இது தமிழ் சினிமாவுக்கு நல்ல உதாரணம். பணம் தாண்டி இது மரியாதை, மதிப்பை தருகிறது. இதற்காக நடிகைகள் சார்பில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்" என்று கூறினார்.