சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் “டெக்ஸ்லா“ படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘டெக்ஸ்லா’ படத்தில் ஜெய், சூரஜ் வெஞ்சரமூடு நடிக்கின்றனர்.

சென்னை,

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஆவார். தமிழில் 2012ம் ஆண்டு வெளியான ‘3’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் நல்லவரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர் ‘வை ராஜா வை’ மற்றும் ‘லால் சலாம்’ ஆகிய படங்களை இயக்கினார். அதிலும் ‘லால் சலாம்’ படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

5 மொழிகளில் தயாராகவுள்ள புதிய திரைப்படத்தை இயக்க ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒப்பந்தமாகியுள்ளார். ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்' படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது. படத்திற்கு ‘டெக்ஸ்லா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘டெக்ஸ்லா’ படத்தின் படப்பிடிப்பு பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஜெய் மற்றும் சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடிக்க உள்ளனர். பூஜை விழாவில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘டெக்ஸ்லா’ படத்தின் படப்பிடிப்பு துவக்கியுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.