சினிமா செய்திகள்

அஜித்குமார் தன்னம்பிக்கையின் உதாரணம்: நடிகர் கிங்காங்

சினிமா முன்பை விட தற்போது சிறப்பாக உள்ளது என்று நடிகர் கிங்காங் கூறினார்.

மதுரை,

மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிங்காங் கள்ளழகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடன் பக்தர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரை நேரில் வந்து சாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சி. அவருடைய ஆசி அனைவருக்கும் கிடைக்கட்டும். திரைப்பட நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகர்களாக நடிப்பது என்.எஸ்.கிருஷ்ணன், சந்திரபாபு காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. அவர்களது நடிப்பை மக்கள் ரசித்து ஏற்று கொள்கின்றனர். இது வரவேற்கத்தக்க விஷயம்.

தற்போது 4, 5 படங்களில் நடித்து வருகிறேன். கடவுளின் ஆசியும், ரசிகர்களின் ஆதரவும் என்றும் எனக்கு உள்ளது. நடிகர் அஜித்குமார் தன்னம்பிக்கையின் உதாரணமாக உள்ளார். அவர் திரையிலும், தரையிலும் (கார் ரேஸ்) ஹீரோவாக திகழ்கிறார். சினிமா முன்பை விட தற்போது சிறப்பாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.