சினிமா செய்திகள்

அக்சய்குமாரின் “ராவடி” படத்தின் படப்பிடிப்பு நிறைவு

விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் பேசில் ஜோசப், எல் கே அக்சய்குமார் நடித்துள்ள ‘ராவடி’ படம் கோடை விடுமுறையில் வெளியாகிறது.

தமிழில் முதன்மை பாத்திரத்தில் பேசில் ஜோசப் அறிமுகமாகும் படம் ‘ராவடி’. இதில் ‘சிறை’ படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த எல்.கே.அக்‌ஷய் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் வடிவேல் இப்படத்தை இயக்கி வருகிறார்.

மலையாளத்தில் முன்னணி இயக்குநராக இருந்து தற்போது முக்கிய நடிகர்களில் ஒருவராக மாறி இருப்பவர் பேசில் ஜோசப். இவர் இயக்கத்தில் உருவான ‘மின்னல் முரளி’ நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார்.இவர் நடித்த ‘ஜெய ஜெய ஹே’, ‘பொன்மேன்’, ‘பேலிமி’ உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் ஆகின. தமிழிலும் இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. அண்மையில் வெளியான ‘பராசக்தி’ படத்தில் இவருடைய கேமியோ பெரிதும் பேசப்பட்டது.

கல்லுாரி மாணவர்கள், விடுதி பின்னணியில் இப் படம் உருவாகிறது. இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்தப் படம் உருவாகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் எஸ்.எஸ்.லலித் குமார் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இப்படத்தில் சத்யன், ஜான் விஜய், ஜாபர் சாதிக், நோபல் கே ஜேம்ஸ், ஷாரிக் ஹாசன் மற்றும் ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பேசில் ஜோசப், எல் கே அக்சய்குமார் நடித்து வந்த ‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.