பாலிவுட் நடிகை ஆலியா பட் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ‘ஆல்பா’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட் தற்போது இயக்குனர் ஷிவ் ராவைல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆல்பா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பலிம்ஸ் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது.
இதுவரை ஆண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு பல்வேறு யுனிவர்ஸ் திரைப்படங்களை உருவாக்கி வந்த யாஷ் ராஜ் நிறுவனம், முதன்முறையாக பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ‘ஆல்பா’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளது. இந்த படத்தில் பாபி தியோல், அனில் கபூர் மற்றும் ஷர்வரி வாக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷன் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
முதலில் கடந்த ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த ‘ஆல்பா’ திரைப்படம், சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. ஜூலை 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ‘ஆல்பா’ திரைப்படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ. 17.42 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்தி மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.