சினிமா செய்திகள்

ஆதிபுருஷ் பட விவகாரம்; தணிக்கை வாரியத்திற்கு அலகாபாத் ஐகோர்ட்டு கடும் கண்டனம்

ஆதிபுருஷ் பட விவகாரத்தில் தணிக்கை வாரியத்திற்கு அலகாபாத் ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

லக்னோ,

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் படம் உலகம் முழுவதும் கடந்த 16-ந்தேதி வெளியானது. ராகவனாக பிரபாசும், ஜானகியாக கீர்த்தி சனோனும் நடித்து உள்ளனர். ராவணனாக சைப் அலி கான் நடித்து உள்ளார்.

எனினும், ஆதிபுருஷ் படத்தின் வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த படத்தில், ஒரு வசனம் வருகிறது. அதில், ஜானகி இந்தியாவின் மகள் என தெரிவித்து உள்ளது ஆட்சேபனைக்கு உரியது என கூறி, நேபாள நாட்டின் காத்மண்டு மற்றும் பொகாரா நகர மேயர்கள் படத்திற்கு தடை விதித்து விட்டனர்.

இந்த நிலையில், ஆதிபுருஷ் பட விவகாரத்தில் தணிக்கை வாரியத்திற்கு அலகாபாத் ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

ஆதிபுருஷ் படத்தின் சர்ச்சைக்குரிய சில குறிப்பிட்ட வசனங்கள் பற்றிய மனு மீது நடந்த விசாரணையில், அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ அமர்வு இன்று கூறும்பாது, தணிக்கை வாரியம் என்ன செய்து கொண்டு இருக்கிறது? வருங்கால தலைமுறைகளுக்கு என்ன கற்பிக்க விரும்புகிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த பட தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் பிறர் ஆஜராகாதது பற்றியும் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை செவ்வாய் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT