பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, தற்போது நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து கிங் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புதிய படத்தில் தீபிகா படுகோனே நடித்துக் கொண்டிருக்கிறார்.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சினிமாவில் 8 மணி நேர பணி இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார். இக்கோரிக்கையால் அவர் ‘ஸ்பிரிட்’ மற்றும் ‘கல்கி 2898 ஏடி’ போன்ற சில படங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி இருந்தும் தனது கோரிக்கையில் உறுதியாக இருக்கிறார்.
தீபிகா படுகோனோ தாயான பிறகு இக்கோரிக்கையை முன்வைத்து வருகிறார். இவ்விவகாரத்தில் தீபிகா படுகோனேவிற்கு பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே ஆதரவு தெரிவித்துள்ளார். அனன்யா பாண்டே, கரீனா கபூர் கான் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் இணைந்து நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டனர். அப்போது திரைத்துறையில் நிலவும் வேலை நேர விவாதங்கள் குறித்து அனன்யா கூறுகையில், தீபிகா படுகோனே தாயாவதற்கு முன்பு அவருடன் பணியாற்றிய அனுபவத்தை நினைவு கூர்ந்தார்.
அனன்யா கூறுகையில், “தீபிகா தாயாவதற்கு முன்பு நான் அவருடன் பணியாற்றியுள்ளேன். அப்போது அவரிடம் இது போன்று 8 மணி நேர வேலை வேண்டும் என்று கோரும் பழக்கம் எதுவும் இருந்ததில்லை. அவர் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார். எதற்கும் புகார் அளிக்கவில்லை, எதையும் பிரத்யேகமாகக் கேட்கவும் இல்லை. இப்போது அவர் ஒரு தாய் என்பதால் முதல் இரண்டு ஆண்டுகள் குழந்தையுடன் இருக்க வேண்டியது அவரது தற்போதைய தேவை” என்றார்.
கரீனா கபூரைப் புகழ்ந்து பேசிய அனன்யா, “அவருக்குப் பின் வரும் நடிகைகளுக்காக அவர் விதிகளை மாற்றியமைத்ததார். கரீனா அதைச் செய்ததன் மூலம் அவருக்குப் பின் வரும் அனைத்துப் பெண்களுக்கும் அவர் ஒரு புதிய பாதையை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். எனவே, உங்கள் தயாரிப்பாளருடன் பணி நேரம் குறித்துப் பேசுவது தவறில்லை என்று நான் நினைக்கிறேன். இது தயாரிப்பாளரிடம் தனிப்பட்ட முறையில் பேசி சரிசெய்யப்பட வேண்டிய விஷயம். இவ்வளவுதான் செய்வோம், இவ்வளவுதான் செய்ய வேண்டும் என்று எந்தக் கடுமையான விதியும் இல்லை. இதைப் பற்றிப் பேச அனைவருக்கும் உரிமை உண்டு” என்றார்.
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் பேசுகையில், “மலையாளத் திரைத்துறையில் பெரும்பாலும் வேலை நேரம் 16 மணி நேரம் வரை நீடிக்கும். படப்பிடிப்பு அட்டவணைகள் வழக்கமாக அதிகாலை 6 மணிக்குத் தொடங்கி, இரவு 9.30 வரை நீடிக்கும்” என்று அவர் விளக்கினார்.