சினிமா செய்திகள்

மீண்டும் டிரோல்களில் சிக்கிய நடிகை அனன்யா பாண்டே

அனன்யா பாண்டே சமூக வலைதளங்களில் டிரோல்களுக்கு ஆளாவது இது முதல் முறையல்ல.

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே. இப்வர் தற்போது நடித்துள்ள ”சந்த் மேரா தில்”(Chand Mera Dil) திரைப்படம் கடந்த 22-ம் தேதி வெளியாகியுள்ளது. திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அதிலுள்ள ஒரு காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அனன்யா பாண்டே மீண்டும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.

அந்த காட்சியில், பாரம்பரிய உடையில் பரதநாட்டியம் ஆடுவது போல் இடம்பெற்றுள்ளார். ஆனால் அவரது நடன அசைவுகள் இயல்பாக இல்லை என்றும், ‘ரோபோட்’ போல இருப்பதாகவும் சில நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இதையடுத்து அந்த காட்சியை மையமாகக் கொண்டு ஏராளமான மீம்களும் இணையத்தில் பரவி வருகின்றன.

அனன்யா பாண்டே சமூக வலைதளங்களில் டிரோல்களுக்கு ஆளாவது இது முதல் முறையல்ல. திரையுலகில் அறிமுகமான காலம் முதலே அவரது நடிப்புத் திறன், வசன உச்சரிப்பு மற்றும் முகபாவனைகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்துள்ளன.

முன்னதாக விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த ’லிகர்’ திரைப்படத்தில் அவரது நடிப்பு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அந்தப் படம் வெளியானபோதும் அவர் பல்வேறு கேலிகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானார்.

எனினும், கடந்த சில ஆண்டுகளில் வெளியான படங்களில் அனன்யா தனது நடிப்பை மேம்படுத்தியநிலையில், அவரை குறிவைக்கும் டிரோல்கள் ஓரளவு குறைந்திருந்தது. இந்நிலையில், தற்போது ‘சந்த் மேரா தில்’ படத்தின் இந்தக் காட்சி மீண்டும் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.