தெலுங்கானா,
பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். பெயரில், ‘ரா என்.டி.ஆர்(RAW NTR)’ என்ற குழு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, ‘ஊரு வாடா’ எனும் தலைப்பில் பிரம்மாண்ட பிரச்சாரத் தொடக்கம் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்தது. மேலும் அதை தீவிரமாகவும் விளம்பரம் செய்யத் தொடங்கியது. இதனால் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் அவர் தனது அரசியல் வருகையை அறிவிக்கவுள்ளதாக உற்சாகமாகினர்.
இதற்கு முன்பு ஜூனியர் என்.டி.ஆரின் அரசியல் வருகை குறித்தான பேச்சுகள் பல முறை எழுந்துள்ளது. அதற்கு காரணம் அவர் பாரம்பரிய அரசியல் குடும்பத்தை சார்ந்தவர் என்பதால். இவர் தெலுங்கு தேசம் கட்சியை நிறுவியவரும், முன்னாள் ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரியுமான புகழ்பெற்ற நடிகர் என்.டி.ராமராவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது தந்தை நந்தமுரி ஹரிகிருஷ்ணாவும் தெலுங்கு தேசம் கட்சியுடன் தொடர்புடையவராக இருந்து மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். அதேவேளையில், அவரது மாமாவும் நடிகருமான பாலகிருஷ்ணா, மூன்று முறை அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இது போக தற்போதைய ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, அவருக்கு தாய்மாமா ஆவார்.
2009-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களின்போது தெலுங்கு தேசம் கட்சிக்காக ஜூனியர் என்.டி.ஆர் பிரசாரம் செய்திருந்தார். ஆனால் அதன் பிறகு பெரிதாக அரசியலில் அவர் ஈடுபடவில்லை. முழு மூச்சாக திரைத்துறையிலே கவனம் செலுத்தி வருகிறார்.
இதனிடையே தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். சந்தித்த முதல் தேர்தலிலேயே, தி.மு.க., -அ.தி.மு.க., போன்ற திராவிட கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு அவர் முதல்-அமைச்சராகி இருப்பது, தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
குறிப்பாக, அண்டை மாநிலமான ஆந்திராவில், ஆளும் தெலுங்கு தேசம் - பா.ஜ.க, கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள ஜன சேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண், தொண்டர்கள் மத்தியில் விஜய்யின் வெற்றி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் விஜய் போலவே, பவன் கல்யாணும் மக்களின் அமோக ஆதரவு பெற்று, அடுத்த முறை முதல்-அமைச்சராக வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகிறது. இதன் காரணமாக, பா.ஜ.க, துணையுடன், தெலுங்கு பேசும் மற்றொரு மாநிலமான தெலுங்கானா அரசியலிலும் பவன் கல்யாண் தீவிரமாக களம் இறங்கி இருக்கிறார். இதனால், இரு மாநில அரசியல் களத்திலும் அனல் பறக்கிறது.
இந்த சூழலில், தெலுங்கு தேச கட்சியின் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்வருமான என்.டி.ராம ராவின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர்., ஆந்திர அரசியலில் களம் இறங்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி ஓரிரு வாரங்களுக்குள் தன்னார்வ தொண்டு அமைப்பை ஜூனியர் என்.டி.ஆர். ஆரம்பிக்கவுள்ளார். இதன் மூலம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சமூகப் பணிகளில் ஈடுபட உள்ளார்.
திரைப்படங்கள் வாயிலாக அதிக ரசிகர்களை ஈர்த்துள்ள ஜூனியர் என்.டி.ஆர்., தமிழகத்தில் த.வெ.க., கட்சி தொடங்கி, தேர்தலை சந்தித்து, ஆட்சியை பிடித்தது வரை, முதல்-அமைச்சர் விஜய்யின் அனைத்து நகர்வுகளையும் உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
அதன் ஒரு கட்டமாக தொண்டு நிறுவனம் தொடங்கி, பின்னாளில் அதை அரசியல் கட்சியாக மாற்றி, தமிழக முதல்-அமைச்சர் விஜய் போலவே அரசியலில் வலுவாக கால் பதிக்கவும், அவர் காய்களை நகர்த்தி வருவதாக பேசப்படுகிறது. ஜூனியர் என்.டி.ஆர்., அரசியலில் நுழைய உள்ளதாக வெளியாகும் தகவல்கள், ஆந்திராவில் உள்ள முக்கியமான அரசியல் கட்சியினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளன.