சென்னை,
விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களிலேயே சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இணையத்தில் கசிந்த படத்தை பார்த்ததாக கூறி சேலத்தைச் சேர்ந்த பிரதீப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், தன்னை முதலில் சாட்சியாக சேர்த்துவிட்டு பின்னர் தன்மீதே வழக்குப்பதிவு செய்திருப்பதாகக் கூறி, சேலத்தைச் சேர்ந்த பிரதீப் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி. குமரப்பன், மனுதாரர் மீது வேறு எந்த கடுமையான குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என்று குறிப்பிட்டார். இதையடுத்து, பிரதீப்புக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்து, ரூ.20 ஆயிரம் மதிப்பிலான இரு நபர் உத்தரவாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அதோடு, அடுத்த 15 நாட்களுக்கு தினமும் காலை சைபர் கிரைம் போலீசார் முன்பு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.