சினிமா செய்திகள்

‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியானது குறித்து ஐகோர்ட்டில் முறையீடு

இந்த திரைப்படம் இணையத்தில் வெளியானது குறித்து தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தாயரிப்பு நிறுவனம் முறையிட்டுள்ளது.

சென்னை,

நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் கடைசியாக நடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. இந்த திரைப்படத்தில் ராணுவம் சார்ந்த காட்சிகள், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கவில்லை. இந்த படத்தை மறுஆய்வு கமிட்டிக்கு பரிந்துரை செய்தது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 'ஜனநாயகன்' படத்தை தயாரித்த நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தணிக்கை சான்றிதழை உடனே வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தனி நீதிபதி உத்தரவை ரத்துசெய்தது. மீண்டும் வழக்கை விசாரிக்கும்படி உத்தரவிட்டது. இதன்படி தனி நீதிபதி முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை தயாரிப்பு நிறுவனம் திரும்ப பெற்றது. 'ஜனநாயகன்' படம் தணிக்கை வாரியத்தின் மறுஆய்வு குழு பரிசீலனையில் இருந்தது. இந்தசூழ்நிலையில், 'ஜனநாயகன்' திரைப்படம் அண்மையில் இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியானது.

இந்த திரைப்படம் வெளியானது குறித்து வழக்கு தொடரப்படவுள்ளதாகவும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தியிடம் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் முறையிடப்பட்டது. அதற்கு நீதிபதி, வழக்கு தாக்கல் செய்தால், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறினார்.