இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் முதல்முறையாக தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்க உள்ளார்.
தமிழ் தொலைக்காட்சியில் சோனி நிறுவனம் தன்னுடைய ‘சோனி விழா’ என்ற புதிய சேனலை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
திரையுலகில் முன்னணி கதாநாயகிகள் மற்றும் முன்னாள் கதாநாயகிகள் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சமந்தாவும் சின்னத்திரையில் ஒளிபரப்பாக இருக்கும் சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரபல ஓடிடிதளமான சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா நிறுவனத்தின் சோனி விழா வெளியிட்டுள்ளது. ஆயுத பூஜை அன்று சமந்தா தொகுப்பாளராக பங்கேற்கும் மாஸ்டர் செப் சமையல் நிகழ்ச்சி வெளியாக உள்ளது.
இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இந்த சேனலில் ‘தமிழ் ஐடல்’ என்கிற புதிய இசைத்திறமையைக் கண்டறியும் நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இசைத்துறையில் உலக அளவில் பிரபலமான ஏ. ஆர். ரகுமான் முதல்முறையாக இசை நிகழ்ச்சிக்கு நடுவராகப் பங்கேற்க உள்ளது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.