தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் நேற்று உலகளவில் வெளியான படம் ‘பெத்தி’. இந்த படத்தினை இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். விளையாட்டை மையப்படுத்தி அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் தியேட்டர்களில் வரவேற்பை பெற்று வருகிறது.
ஆனால், ’பெத்தி’ படத்தில் ஜான்வி கபூரின் கதாபாத்திரம், மிக மோசமான முறையில் அளவுக்கு மீறிய ஆபாசத்துடனும், வெறும் கவர்ச்சி பொருளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். விளையாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், கதாநாயகிக்கு கதையில் எந்தவித முக்கியத்துவமும் தராமல், அவரை வெறும் கவர்ச்சிக்குரிய ஒரு பொருளாக மட்டுமே காட்டியிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் கொடுக்கும் வகையில் பெத்தி பட இயக்குனர் புச்சி பாபு சனா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,
"ஒரு திரைப்படப் படைப்பாளியாக, சினிமா பார்வையாளர்களை மகிழ்விக்க வேண்டும், அவர்களுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும், மேலும் அவர்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்று நான் நம்புகிறேன். அது ஒருபோதும் யாரையும் சங்கடமாகவோ அல்லது அவமதிக்கப்பட்டதாகவோ உணர வைக்கக்கூடாது. 'பெட்டி' திரைப்படத்தின் சில காட்சிகள் குறித்த கருத்துக்களை நாங்கள் கேட்டறிந்து, அவற்றை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம்.
திரையிலும் சரி, நிஜத்திலும் சரி, பெண்கள் மீது எனக்கு எப்போதுமே மிகுந்த மரியாதை உண்டு. எந்தவொரு பெண் கதாபாத்திரத்தையும் ஒரு பொருளாகக் கருதுவதோ அல்லது அவமதிப்பதோ எங்கள் நோக்கமாக ஒருபோதும் இருந்ததில்லை. திரைப்படத்தின் ஏதேனும் ஒரு பகுதி அவ்வாறு உணரப்பட்டிருந்தால், அந்த உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம், எழுப்பப்படும் கவலைகளைப் புரிந்துகொள்கிறோம், மேலும் மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருகிறோம்.
கருத்துக்களை மதிப்பாய்வு செய்த பிறகு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் மாற்றங்களைச் செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம். பார்வையாளர்களுடனான தொடர்பின் மூலமே சினிமா வளர்கிறது. கதைசொல்லிகளாகிய எங்களுக்கு, மாறிவரும் கண்ணோட்டங்களையும் உணர்வுகளையும் கவனத்தில் கொள்ளும் பொறுப்பு உள்ளது.
ஒவ்வொரு பெண்ணும் மதிக்கப்படவும், போற்றப்படவும், கண்ணியத்துடன் சித்தரிக்கப்படவும் தகுதியானவர். வலிமையான கதாபாத்திரங்களைக் கொண்டாடும் மற்றும் அந்த விழுமியங்களை நிலைநிறுத்தும் கதைகளைச் சொல்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தங்கள் கருத்துக்களை நேர்மையாகவும் உண்மையாகவும் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.