சினிமா செய்திகள்

கோவாவில் ரகசிய பதிவு திருமணம் செய்த நடிகர் அர்ஜுன் ராம்பால்

அர்ஜுன் ராம்பால் தனது 54 ஆவது வயதில் மாடல் அழகி கேப்ரியெல்லாவை பதிவு திருமணம் செய்துகொண்டார்.

8 ஆண்டுகளாக காதலில் இருந்த அர்ஜுன் ராம்பால் தனது 54-வது வயதில் மாடல் அழகியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.

அர்ஜூன் ராம்பால் ‘துரந்தர்’ படத்தில் மேஜர் இக்பால் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தில் பரவலான ரசிகர்களை ஈர்த்தவர் நடிகர் அர்ஜுன் ராம்பால். இவர் மாடல் அழகியான கேப்ரியெல்லா டெமெட்ரியேட்ஸை சந்தித்து இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தவர்கள் திருமணம் செய்துள்ளனர்.

அதிகாரப்பூர்வமாக உறுதி செய்த பதிவாளர்

திருமணம் குறித்து இந்த ஜோடி தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் எந்தவொரு புகைப்படத்தையோ அல்லது அறிவிப்பையோ வெளியிடாத நிலையில், வடகோவா பார்தேஸ் துணைப் பதிவாளர் சூரஜ் வெர்னேகர் இவர்களது திருமணச் செய்தியை செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த எளிய பதிவுத் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

2018 முதல் தொடங்கும் காதல் பயணம்

அர்ஜுன் ராம்பால் மற்றும் கேப்ரியெல்லா இருவரும் கடந்த 2018-ஆம் ஆண்டு பொதுவான நண்பர்கள் மூலமாகச் சந்தித்துக் கொண்டனர். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனைத் தொடர்ந்து, அர்ஜுன் ராம்பால் தனது முதல் மனைவி மெஹ்ர் ஜெசியாவிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தார். இவர்களது விவாகரத்து 2019-ல் முறைப்படி முடிவுக்கு வந்தது.

லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்த நடிகர்

திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்த இந்த தம்பதியினருக்கு, ஜூலை 2019-ல் அரிக் என்ற முதல் ஆண் குழந்தையும், ஜூலை 2023-ல் அரிவ் என்ற இரண்டாவது ஆண் குழந்தையும் பிறந்தனர்.அர்ஜுன் ராம்பாலுக்கு அவரது முதல் திருமணம் மூலம் மஹிகா, மைரா என்ற இரு மகள்கள் ஏற்கனவே உள்ளனர். அவர்கள் இருவரும் கேப்ரியெல்லாவுடன் மிகவும் இணக்கமான நட்புறவைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிச்சயதார்த்தம்

கடந்த டிசம்பர் 2025-ல், பிரபல நடிகை ரியா சக்ரவர்த்தியின் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் இந்த ஜோடி கலந்து கொண்டது. அப்போது கேப்ரியெல்லா, "நாங்கள் இப்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?" எனப் பேசினார்.உடனே குறுக்கிட்ட அர்ஜுன் ராம்பால், "நாங்கள் ஏற்கனவே நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம்" என்று கூறி அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் ஆச்சரியத்தை அளித்தார்.

நிச்சயதார்த்தம் முடிந்து சில மாதங்களிலேயே, தற்போது ஆகஸ்டில் தங்களது 8 ஆண்டுகால காதலைத் திருமணத்தின் மூலம் இந்த ஜோடி முறைப்படுத்தியுள்ளது. இது பாலிவுட் வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் வாழ்த்துகளைக் குவித்து வருகிறது.