சென்னை,
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் தற்போது அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார். சுபாஷ் கே ராஜ், பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விவேக் பிரசன்னா, அர்ஜுன் சிதம்பரம், ஜான் கொக்கன், பவன், வினோத் சாகர், பாலா ஹாசன் ஆர் மற்றும் திலீபன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த புதிய படத்தில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தை இயக்கிய ஏஜிஎஸ் நிறுவனம் இயக்கியுள்ளது. அப்பா - மகளுக்கு இடையே நடக்கும் கதையாக இப்படம் உருவாக உள்ளதாக திரையுலகில் பேசப்படுகிறது. ‘கே.ஜி.எப்’ திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்த இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில், தற்காலிகமாக ‘ஏஜிஎஸ் 28’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக ஏஜிஎஸ் நிறுவனம் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது. அதில், “‘ஏஜிஎஸ் 28’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. முதல் கிளாப்பில் இருந்து இறுதி 'ஷாட் ஓகே' வரை, உற்சாகம், கடின உழைப்பு, சிறந்த சினிமா அனுபவம் நிறைந்த பயணமாக இருந்தது. இந்த படத்திற்காக முழு மனதுடன் உழைத்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கு எங்கள் மனப்பூர்வமான நன்றி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.