சென்னை,
தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் ஆக்சன் கிங் அர்ஜுன், தற்போது அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் சுபாஷ் கே ராஜ், நடிகர் பிரதீப் ரங்கநாதன் அவர்களின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், அப்பா – மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. மேலும், கேஜிஎப் படத்தின் இசையமைப்பாளரான ரவி பசூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
முழுமையான ஆக்சன் திரைப்படமாக உருவான இந்தப் படத்தில், கராத்தே தெரிந்த அர்ஜுன் குடும்பம் எப்படி வில்லன்களுடன் மோதுகிறார்கள் என்பதை மையப்படுத்தி விறுவிறுப்புடன் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் கடந்த மே 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. டிக்கெட் முன்பதிவுகள் அதிகரித்து வருவதால் அதிக திரைகள் இப்படத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இப்படம் திரையிடப்பட்டுள்ள பெரும்பாலான திரைகள் ஹவுஸ்புல் காட்சிகளாக மாறி வருகின்றன. இதனால், வணிக ரீதியாகவும் இப்படம் வெற்றிப்படமாக மாறவுள்ளதால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியான ‘பிளாஸ்ட்’ திரைப்படம் உலகளவில் ரூ. 70 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டியுள்ளது. ‘பிளாஸ்ட்’ திரைப்படம் 3வது வாரத்தில் கேரளாவில் 250 திரைகளில் வெளியாகி சாதனை படைத்துவருகிறது.
இந்த நிலையில், ‘பிளாஸ்ட்’ திரைப்படம் வரும் ஜூன் 25ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.