சினிமா செய்திகள்

“அருள்வான்” கல்வியின் அவசியம் குறித்து பேசும் படம் - அருள்நிதி

கணேஷ் விநாயக் இயக்கத்தில் அருள்நிதி நடித்த ‘அருள்வான்’ படம் வரும் 17 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

‘அருள்வான்’ குழந்தைகளுக்கான கல்வியின் அவசியம் குறித்து பேசியிருக்கும் படம் என்று அருள்நிதி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அருள்நிதி. இவர் 'வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13, டிமாண்டி காலனி 2' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே, தகராறு, வீர சிவாஜி, தேன் படங்களை இயக்கியவர் கணேஷ் விநாயக். இவரது இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அருள்வான்’. ரம்யா பாண்டியன், காளிவெங்கட், ஆரவ், கிருத்திகா மற்றும் ஜான்விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘90 பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு வெளியான 'தகராறு' படத்திற்குப் பிறகு, அருள்நிதி மற்றும் கணேஷ் விநாயகம் இந்த படத்தின் மூலமாக மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. ‘அருள்வான்’ படத்தின் ‘அல்லிபூவே’ பாடலை யுகபாரதி வரிகளில் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து பாடியுள்ளார்.

‘அருள்வான்’ படத்தின் டிரெய்லரை நடிகர சூர்யா நேற்று வெளியிட்டார். மலைக்கிராமத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வையும், அங்குள்ள சிறுமியின் கல்வி தொடர்பான வலியையும் பேசும் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் 17 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், ‘அருள்வான்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் அருள் நிதி, “இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சொல்லிவிட்டு, ஐந்து நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும் என்றார். பிறகு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றவுடன் ஐந்து நாள் என்பது பத்து நாளாகவும்... பிறகு 15 நாளாகவும்.. பிறகு 20 நாளாகவும் உயர்ந்தது. இப்படத்தின் கதையை கேட்ட பிறகு நான் முழு நீள படத்தில் நடித்திருந்தாலும் இது போன்றதொரு கதையை, கதாபாத்திரத்தை என்னால் ஏற்று நடித்திருக்க முடியுமா? என தெரியாது. இந்த படத்தில் முத்துவேல் என்ற மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். குழந்தைகளுக்கான கல்வியின் அவசியம் குறித்து பேசியிருக்கும் படம். அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

காளி வெங்கட், “இந்தப் படத்தில் நடித்தது மிகவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. மனிதர்களும், மிருகங்களும் நடமாடும் கடினமான மலைப் பகுதியில்தான் படப்பிடிப்பு நடைபெற்றது. அடிப்படைக் கல்வியை பற்றி பேசும் ஒரு படம் இது. இந்தப் படம் வெளியான பிறகு நிச்சயமாகப் பேசப்படும். நடிகர் அருள்நிதி ஒரு படத்தில் சாதாரணமாக நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டார். அவருடைய கதை தேர்வு பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் என்றால், இந்தப் படம் மிக நன்றாக இருக்கும். இப்படத்தில் உடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.