சினிமா செய்திகள்

‘நான் உயிருடன் இருக்கும்வரை...’ - நடிகர் ரவி மோகனின் அதிரடி பதிவு

நாங்கள் 4 பேரும் இனி ஒரே அறையில் இருக்கப்போவதில்லை என ரவி மோகன் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து பெறுவதற்கான முயற்சிகளில் இருப்பதால் கடந்த ஓராண்டாகவே சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உள்ளார். மனைவியைப் பிரிந்தவர் பாடகி கெனிஷாவுடன் இணைந்து வாழ்ந்து வந்தார். இருவரும் பொது நிகழ்வுகளில் ஒன்றாகக் கலந்துகொள்வது, படத்தின் புரமோஷன்களுக்கு வருவது என ஜோடியாக இருந்தனர்.

ஆனால், அண்மையில் ரவி மோகனை விட்டு பிரிவதாக கெனிஷா அறிவித்தார். இதையடுத்து ரவி மோகன் அளித்த பேட்டியில், “நான் விவாகரத்து பெறும் வரை என்னுடைய நடிப்பில் படங்கள் வெளியாகாது” என தெரிவித்தார். அவருடைய இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலானது. அத்துடன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கின் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரவி மோகனுக்கு பிள்ளைகளை பார்க்க அனுமதி அளித்தும், அவர் மாதம் 3 லட்சம் ரூபாய் ஆர்த்தி ரவிக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் செய்தியாளர்களை சந்தித்து, ‘அவரது 2 குழந்தைகளின் கல்வி செலவுக்காகத்தான் பணம் கேட்டோம். ஆர்த்தியின் தனிப்பட்ட செலவுக்காக பணம் கேட்கவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனக்கு மிகவும் நெருங்கியவர்களுக்கு இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள். உண்மையான நண்பர்களைப் போல் என்னுடன் நின்றதற்கு நன்றி.

சிலர் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு செயல்களில் ஈடுபட்டு வருவது துரதிருஷ்டவசமானது. என்னைப் பொறுத்தவரை, ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் உயிருடன் இருக்கும்வரை நாங்கள் 4 பேரும் இனி ஒரே அறையில் இருக்கப்போவதில்லை. மகிழ்ச்சியாக இருங்கள். உங்கள் நண்பர்களை கவனமாக தேர்வு செய்யுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.