ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி, தயாரித்த ‘இதயம் முரளி’ திரைப்படம் கடந்த ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் நாயகனாக நடிகர் அதர்வாவும் நாயகிகளாக பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் அதர்வாவுடன் இணைந்து நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
ஒரு தலை காதலை வைத்து உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. காதல், நகைச்சுவை, எமோஷனல் காட்சிகளால் இப்படத்தின் கதை உருவாகியிருந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இப்படத்திற்கு டிக்கெட் விற்பனைகள் கணிசமாக அளவில் விற்பனையாகி வருகிறது. இதனால், இப்படம் இதுவரை ரூ. 15 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் பிரீத்தி முகுந்தன் பேசுகையில், “இரண்டரை வருஷமாக இந்த படத்துடன் பயணித்திருக்கிறோம். இப்போது பிரிவதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. எல்லாருக்கும் நன்றி. படம் பார்க்கும் போது அவ்வளவு அழகாக இருந்தது. ஆகாஷ் பாஸ்கருனுக்கு தயாரிப்பை விட இயக்கம் தான் விருப்பமெனச் சொன்னார்கள். அது அவருடைய கதையிலும் அதற்காக அவர் செய்த டீடெய்லிங்கிலும் தெரிந்தது. இயக்கம் மீதான ஆர்வம் இல்லையென்றால் இதெல்லாம் இருக்காது.
படத்தில் என்னுடன் நடித்த பிரண்ட்ஸ் கேங்கிற்கு நன்றி. அவர்களால் தான் ஷூட் அவ்வளவு ஜாலியாக இருந்தது. அதர்வா ஒரு ஜெண்டில் மேன். அவருடனான நட்பு நீண்ட நாள் வரும் என நம்புகிறேன். நான் முதன் முதலில் சைன் பண்ண படம் இதுதான். இரண்டரை வருஷம் முடிந்ததும் திரும்பவும் ஷூட்டிங்கிற்கு கூப்பிட மாட்டார்களா என யோசித்தேன். அவர்களை திரும்பவும் பார்க்க முடியாது என நினைக்கும் போது வருத்தமாகத் தான் இருக்கிறது” என்றார்.