சினிமா செய்திகள்

உண்மை சம்பவ கதையில் அதர்வாவின் புதிய படம்... ரிலீஸ் அப்டேட்

இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளி, 'காளி' என்ற இளைஞராக நடித்துள்ளார்.

நடிகர் அதர்வா நடிப்பில் இயக்குநர் ராஜமோகன் இயக்கியுள்ள புதிய திரைப்படம் 'அட்ரஸ்'. சமூக கருத்துகளுடன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம், உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்ட கதை

1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழக–கேரள எல்லைப் பகுதியில் அமைந்திருந்த ஒரு கிராமம் தனது அதிகாரப்பூர்வ முகவரியையே (Address) இழந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த கிராம மக்கள் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரப் போராட்டத்தை த்ரில்லர் மற்றும் சமூக அம்சங்களுடன் படம் பதிவு செய்கிறது.

இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளி, 'காளி' என்ற இளைஞராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பூஜா ஜாவேரி நடித்துள்ளார். மேலும், தம்பி ராமையா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பக் குழு

'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்', 'வானவராயன் வல்லவராயன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜமோகன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அஜய் கிருஷ்ணா தயாரித்துள்ள இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'அட்ரஸ்'

இந்த நிலையில், 'அட்ரஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வித்தியாசமான கதைக்களம் மற்றும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.