சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் காயமடைந்த பாலகிருஷ்ணா... வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை

'டூப்' கலைஞரை பயன்படுத்தாமல் பாலகிருஷ்ணா நேரடியாக நடித்தபோது, எதிர்பாராதவிதமாக காயமடைந்தார்.

ஐதராபாத்,

'டூப்' இல்லாமல் நடித்தபோது காயம்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா, தனது 111-வது திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கும் இந்தப் படத்தை ரித்தி சினிமாஸ் தயாரித்து வருகிறது. இதில் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, மஞ்சு மனோஜ், சரத்குமார், அபிமன்யு சிங், சுவாசிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

காக்கினாடாவில் நடந்த விபத்து

ஆந்திர மாநிலம் காக்கினாடா துறைமுகப் பகுதியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், பிரமாண்டமான சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இந்தக் காட்சியில் 'டூப்' கலைஞரை பயன்படுத்தாமல் பாலகிருஷ்ணா நேரடியாக நடித்தபோது, எதிர்பாராதவிதமாக கால் நழுவி கீழே விழுந்தார். இதில் அவரது இடது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

3 மணி நேர அறுவை சிகிச்சை

விபத்துக்குப் பிறகு உடனடியாக பாலகிருஷ்ணா காக்கினாடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஐதராபாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு, இடது முழங்காலில் ஏற்பட்ட தசைக் கிழிவு காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முழு ஓய்வுக்குப் பிறகு படப்பிடிப்பில் இணைவு

தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ள பாலகிருஷ்ணா, முழுமையாக குணமடைந்த பிறகு மீண்டும் தனது 111-வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என படக்குழு தெரிவித்துள்ளது. அவரது உடல்நலம் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்களும் திரையுலகினரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.