பாடலாசிரியர் வைரமுத்து பாரதிராஜா, பாக்யராஜ் மற்றும் ரஜினி குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக ‘16 வயதினிலே’ திரைப்படத்தில் முதன்முறையாக இணைந்தவர் பாக்யராஜ். அதன் பிறகு கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் உள்ளிட்ட படங்களில் பாரதிராஜாவுடன் பணியாற்றியுள்ளார்.இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பாக்யராஜை ஹீரோவாக வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தியதும் பாரதிராஜாதான். கோலிவுட்டின் 2 பெரிய நடிகர்களான ரஜினி மற்றும் கமல் இணைந்து நடித்த திரைப்படம் ‘16 வயதினிலே’.
இயக்குநர் பாரதிராஜா கடந்த ஜுன் மாதம் பத்தாம் தேதி உயிரிழந்தார். அவர் உயிரிழந்த இரண்டே வாரங்களில் சிஷ்யர் பாக்யராஜும் கடந்த ஜூன் 27-ந் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இரண்டு ஜாம்பவான்களை ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இழந்த அதிர்ச்சியிலிருந்து பலரும் மீளவில்லை.
இந்நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து பாரதிராஜா, பாக்யராஜ் மற்றும் ரஜினி குறித்தும் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
‘16 வயதினிலே’ படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.
16 வயதினிலே படப்பிடிப்பு
சப்பாணியை அடித்த
பரட்டையை
ஸ்ரீதேவி திட்டித் தீர்க்கும் காட்சி
பேசிமுடித்து
ரஜினி முகத்தில்
காறித் துப்ப வேண்டும்
அந்தக் கற்றைக்காகத்
தயாரித்து வைத்திருந்த
சோப்பு நுரை
பலமுறை எடுத்தும்
முகத்தில் சரியாகப் படியவில்லை
‘உண்மையாகவே
காறித் துப்புங்கள்’ என்கிறார் ரஜினி
‘ஐயோ மாட்டேன்’ என்று
ஶ்ரீதேவி அலறி ஓடிவிடுகிறார்
‘காட்சி
உயிர்ப்போடு வரவேண்டும்;
நீங்களே துப்புங்கள்’ என்கிறார்
பாரதிராஜாவிடம் ரஜினி
அவர் தயங்கித் தயங்கி
ரஜினியின் முகத்தில்
குப்பென்று அப்பும்படி
காறித் துப்புகிறார்
பார்வையாளர்
முகத்திலும் படியும்படி
காட்சி
துடிப்போடு பதிவாகிறது
ரஜினியைக் கட்டிப்பிடித்துக்
கைக்குட்டையால் முகம்துடைத்துக்
கண்ணீர் சிந்துகிறார் பாரதிராஜா
இதைப் பக்கத்திலிருந்து
பார்த்தவர் பாக்யராஜ்
அவரது சுயசரிதைக்கு
முன்னுரை எழுதிமுடித்தேன்;
அதில் பதிவாகியிருக்கும்
சம்பவம் இது
நடிப்பு என்பது நடிப்பல்ல;
அர்ப்பணிப்பு
ரஜினிகாந்தின் நடிப்பை பார்த்து பாரதிராஜா கண்ணீர் விட்ட நிகழ்வு கவனம் பெற்றுவருகிறது.