சினிமா செய்திகள்

பிக் பாஸ் 10: தலைமை பண்பு குறித்து விஜய் சேதுபதி பேச்சு - விஜய் தொலைக்காட்சி விளக்கம்

‘பிக் பாஸ் 10’ வார இறுதி நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய வீடியோ வைரலாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் 10’ ரியாலிட்டி ஷோவில் அதை தொகுத்து வழங்கும் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதுகுறித்து விஜய் தொலைக்காட்சி விளக்கம் அளித்துள்ளது.

சட்டப் பேரவையை மையமாக கொண்ட நிகழ்ச்சி

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. இம்முறை சட்டப் பேரவையை மையமாகக் கொண்டு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதற்காக ஜனநாயக அறை ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது. அதில் ஆளும் அணி ஒரு பிரிவாகவும், எதிர் அணி மற்றொரு பிரிவாகவும் செயல்படுகிறது. ஆளும் அணியினர் செய்யும் தவறுகளை எதிர் அணியினர் சுட்டிக்காட்ட வேண்டும். போட்டியின் சுவாரசியத்தைக் கூட்டும் வகையில் நிகழ்ச்சி இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடுவார். நிகழ்ச்சி மற்றும் போட்டியாளர்களிடையே உள்ள நிறை, குறைகளை சுட்டிக்காட்டுவார்.

ஓடுவது லீடருக்கான தகுதி இல்லை

தலைமைத்துவம் குறித்து அறிவுரை வழங்கிய விஜய் சேதுபதி “தலைமைப் பண்பு என்றால் என்னவென்று தெரியாமல்... வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்னைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மேல் பழியைப் போட்டுவிட்டு அங்கிருந்து தெறித்து ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை” என பேசியிருந்தார்.

விர்ச்சுவல் வாரியர்ஸ் விஜய் சேதுபதி மீது குற்றச்சாட்டு

தலைமைப் பண்பு குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய வீடியோ பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இவர் முதல்-அமைச்சர் விஜய்யைதான் தாக்கி பேசியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதனை பார்த்து கடுப்பான விர்ச்சுவல் வாரியர்ஸ், விஜய் சேதுபதி மீது முன்பு எழுந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் லிஸ்ட் போட்டு ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்க, அவருக்குச் சட்ட ரீதியாகத் துணை நிற்போம் என அதிமுக எம்.பி. இன்பதுரை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

விஜய் டிவி விளக்கம்

இந்த சர்ச்சை விவகாரங்களுக்கு தற்போது விஜய் டிவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் “‘பிக் பாஸ் தமிழ் சீசன் 10’ என்பது அதன் வழக்கமான வடிவம், தீம் மற்றும் விளையாட்டுச் சூழலுக்குள் வழங்கப்படும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியில் இடம்பெறும் சூழ்நிலைகள், உரையாடல்கள், கருத்துகள் மற்றும் தொடர்புகள் அனைத்தும் நிகழ்ச்சியின் கதைக்களத்தின் ஒரு பகுதியாகும். அவை நிகழ்ச்சிக்கு உட்பட்ட சூழலிலேயே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

இந்நிகழ்ச்சியில் குறிப்பிடப்படும் எந்தவொரு வெளிப்பாடோ அல்லது கருத்தோ, நிகழ்ச்சிக்கு வெளியில் உள்ள எந்தவொரு தனிநபரையோ, அமைப்பையோ, நிறுவனத்தையோ, கருத்தியலையோ அல்லது சூழ்நிலையையோ பிரதிநிதித்துவப்படுத்துவதாகவோ, ஆதரிப்பதாகவோ அல்லது விமர்சிப்பதாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்நிகழ்ச்சியின் பொழுதுபோக்கு நோக்கத்தைத் தாண்டி, வேறு எந்த வகையிலும் செய்யப்படும் விளக்கங்களோ அல்லது ஒப்பீடுகளோ நிகழ்ச்சிக் குழுவினரால் நோக்கம் கொள்ளப்பட்டதும் அல்ல; ஆதரிக்கப்படுவதும் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT