மும்பை,
மௌனி ராய் மற்றும் சூரஜ் நம்பியார் இருவரும் 2019-ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் துபாயில் முதன்முதலாக சந்தித்தனர். அதன் பின்னர் மூன்று ஆண்டுகள் காதலித்து வந்த இந்த ஜோடி, 2022 ஜனவரியில் கோவாவில் உள்ள ஹில்டன் ரிசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர். மலையாள மற்றும் பெங்காலி பாரம்பரிய முறைகளில் இவர்களது திருமணம் நடைபெற்றது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மௌனி ராய், 'நாகினி' சீரியல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். பின்னர் 'பிரம்மாஸ்திரா' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் 'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' திரைப்படம் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த சூரஜ் நம்பியார், துபாயில் முதலீட்டு வங்கி அதிகாரியாகவும் தொழிலதிபராகவும் பணியாற்றி வருகிறார். பாலிவுட் நடிகையான மௌனி ராய் கவர்ச்சியான புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிடுவதால் எப்போதும் ரசிகர்களின் கவனத்திலேயே இருக்கிறார்.
சமீபத்தில் நடிகை மௌனி ராய் மற்றும் அவரது கணவர் சூரஜ் நம்பியார் ஆகியோர் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் 'அன்பாலோ' செய்தனர். இதனால், இவர்களின் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்த நிலையில், மௌனி ராய் இன்ஸ்டாவில், “நாங்கள் இருவரும் அவரவர் பாதையில் பயணிக்கலாம் என முடிவு செய்துள்ளோம். எங்கள் தனிப்பட்ட வாழ்வு குறித்து நிறைய போலிச் செய்திகள் பகிரப்பட்டு வைரலாகின. ஆனால், அவை எதுவும் எங்கள் உறவின் உண்மையைப் பிரதிபலிக்கவில்லை. எங்களின் தனியுரிமையை மதித்தவர்களுக்கு நன்றி” என விவாகரத்தை அறிவித்துள்ளார்.