சினிமா செய்திகள்

"தம்பி சூரி மிகப்பெரிய சம்பவம் செய்திருக்கிறாய்" - சமுத்திரக்கனி பாராட்டு

இப்படத்தில் சூரியின் நடிப்புக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை,

மண்டாடி படத்தின் முரட்டு வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ; தம்பி சூரி மிகப்பெரிய சம்பவம் செய்திருக்கிறாய் …மீண்டும் மீண்டும் நீ வெல்ல வேண்டும்” என்று சமுத்திரக்கனி பதிவிட்டுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சூரி, அதன்பிறகு ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவரது நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றன.

நட்சத்திர பட்டாளத்துடன் ‘மண்டாடி’

தற்போது மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். எல்ரட் குமார் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படகுப்போட்டியை மையமாகக் கொண்ட ‘மண்டாடி’

மீனவர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, அவர்களுக்கிடையே நடைபெறும் படகுப்போட்டியை மையமாகக் கொண்டுள்ளது. ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும், திரைத்துறையை சேர்ந்த பலரும் இந்தப் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

6 நாள்களில் ரூ. 70 கோடி வசூல்

‘மண்டாடி’ படம் உலக அளவில் 6 நாள்களில் ரூ. 70 கோடி வரை வசூலித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. சூரி கதாநாயகனாக நடித்த படங்களிலேயே இப்படம் அதிக வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் சூரியின் நடிப்புக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட நடிகர் ரஜினிகாந்த் சூரியை போனில் வாழ்த்தினார்.

சமுத்திரக்கனி வாழ்த்து

அந்த வகையில், நடிகர் சமுத்திரக்கனி நடிகர் சூரியை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, “மண்டாடி முரட்டு வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ; தம்பி சூரி மிகப்பெரிய சம்பவம் செய்திருக்கிறாய் …மீண்டும் மீண்டும் நீ வெல்ல வேண்டும் …இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் இன்னும் பல உச்சிகள் தொட வாழ்த்துகள்.. குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT