சென்னை,
பிரபல இசையமைப்பாளர் ஏஅர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் தனது நண்பருடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் ஏஆர் அமீன், அவரது நண்பர் பார்கவ், கால் டாக்சி டிரைவர் ஆகிய அனைவரும் லேசான காயங்களுடன் தப்பினர். இந்த விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன். பாடகரான இவர், குழந்தை பருவத்திலேயே தன் தந்தை இசையில் பாடகராக அறிமுகம் ஆகியுள்ளார். 2015ஆம் ஆண்டு ஓகே கண்மணி படத்தில் இடம்பெற்ற மௌலா யா சல்லி வசல்லிம் எனும் பாடல் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்தது.
இந்த நிலையில், ஏஆர் அமீன் தனது நண்பருடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கியது இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே ஏ.ஆர்.அமீனின் கார் அதிகாலையில் விபத்தில் சிக்கியது.
ஏ.ஆர்.அமீன் மற்றும் அவரது நண்பருடன் கோயம்பேட்டில் இருந்து வந்த சொகுசு கார், எதிரே வந்த கால் டாக்சி மீது மோதியது. இந்த விபத்தில் ஏஆர் அமீன், அவரது நண்பர் பார்கவ், கால் டாக்சி டிரைவர் ஆகிய அனைவரும் லேசான காயங்களுடன் தப்பினர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினர், இந்த விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் சிக்கிய கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானுக்கு கதீஜா ரஹ்மான், ரஹீமா ரஹ்மான் என இரண்டு மகள்களும் ஏ.ஆர். அமீன் என்ற மகனும் உள்ளார்.