சென்னை,
கடந்த 2015-16ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் படத்தில் நடித்ததன் மூலம் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ஆம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, ’புலி’ படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் திரைப்பட வருமானத்தை கணக்கில் காட்டாமல் மறைத்துள்ளார் என கண்டறிந்தது.
வருமானத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு மறைத்ததற்கான சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதத்தை விதித்து, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதற்கிடையே, வருமான வரித்துறை சோதனையின் போது விஜய்யிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து விஜய் மீது வருமான வரி சட்டத்தின் கீழ் வழக்கு தொடர வேண்டும் எனவும் மோசடி , குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் புலி கொடுங்கையூரை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக ராஜ்குமார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம்,வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.