சினிமா செய்திகள்

ஓட்டு போடுங்கள்..ஆனால் ஓட்டை விற்காதீர்கள்.. - நடிகர் சிபிராஜ்

ஓட்டு போடுவது என்பது நம்முடைய உரிமை மட்டுமல்ல நம் ஜனநாயக கடமையும் கூட என்று நடிகர் சிபிராஜ் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபைக்கு ஒரேகட்டமாக இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதையடுத்து, மக்கள் அதிக ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். நகரங்களிலும், கிராமங்களிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

அந்தவகையில், சத்யராஜின் மகனும், நடிகருமான சிபிராஜ் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். வாக்கு செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், எல்லா தேர்தலும் முக்கியமான தேர்தல் தான். ஓட்டு போடுவது என்பது நம்முடைய உரிமை மட்டுமல்ல நம் ஜனநாயக கடமையும் கூட. என்னுடைய கடமையை நான் ஆற்றிவிட்டேன். நீங்களும் தவறாமல் உங்கள் வாக்கினை செலுத்துங்கள். நான் மக்களுக்கு சொல்வது ஒன்றுதான்.. ஓட்டு போடுங்கள்..ஆனால் ஓட்டை விற்காதீர்கள்.. நன்றி என்று பேசினார்.