சென்னை,
ரூ.10 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் விமல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
'மன்னர் வகையறா' படத்தின் தயாரிப்புக்காக நடிகர் விமல், பைனான்சியர் கோபி என்பவரிடம் இருந்து ரூ.4 கோடியே 50 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இந்த தொகையை திருப்பிக்கொடுக்கும் வகையில் விமல் கொடுத்த காசோலை போதுமான பணம் இல்லை என திரும்பி வந்தது. இதையடுத்து விமலுக்கு எதிராக கோபி, சென்னை 11-வது சிறு வழக்குகளையும் விசாரிக்கும் கோர்ட்டில் காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த ஜூலை 23-ந்தேதி அளித்த தீர்ப்பில், விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தும். காசோலை தொகையை கோபிக்கு திருப்பிக்கொடுக்கவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை மாவட்ட 15-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விமல் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ரூ.10 லட்சத்தை 60 நாட் களில் விசாரணை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் தண்டனையை நிறுத்திவைத்து கடந்த ஆகஸ்டு 4-ந்தேதி உத்தரவிட்டார்.
ரூ.10 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் விமல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், 10 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.