சினிமா செய்திகள்

சட்டசபையில் அனல் பறக்க பேசிய முதல்-அமைச்சர் விஜய்.. தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பெருமிதம்

முதலமைச்சர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தனது இன்ஸ்டாகிராமில் பெருமையாக பதிவிட்டுள்ளார்.

சென்னை,

எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும், அதை எளிதாகக் கையாளும் முதல்வரை சந்தித்தது, ஒரு தந்தையாகப் பெருமைப்பட்ட நேரம் என்று முதலமைச்சர் விஜய்யை சந்தித்தது குறித்து அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பெருமிதத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

விஜய்யின் சட்டசபை பேச்சு

தமிழக சட்டசபையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புத்துறை மானியக் கோரிக்கையில் உறுப்பினர்களின் கேள்விக்கு முதல்-அமைச்சர் விஜய் பதில் அளித்து பேசினார். சட்டம் ஒழுங்கு நிலை குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு தனது பாணியில் ஆக்ரோஷமாகவும், கலாய்க்கும் விதமாகவும் பதிலளித்தார். விஜய்யின் இந்த சட்டசபை பேச்சு சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலாகின. விஜய் பேசியதை சிறிய சிறிய வீடியோக்களாக பதிவிட்டு தவெகவினர் சோஷியல் மீடியாக்களில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய்

விஜய் தனது உரையில் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். “திமுக இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும், தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும். தவெக ஆட்சியில் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுங்கட்சியினர் தொடர்புடைய வழக்கில் காலதாமதம், திமுக நிர்வாகிகள் காப்பாற்றப்பட்டது என பெரிய பட்டியல் உள்ளது” என்று பரபரப்பாக பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது.

எஸ்.ஏ. சந்திரசேகர் பெருமிதம்

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தனது இன்ஸ்டாகிராமில் பெருமையாக பதிவிட்டுள்ளார். எஸ்.ஏ. சந்திரசேகர் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் கூறியிருப்பதாவது; “எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும், அதை எளிதாகக் கையாளும் முதல்வரை சந்தித்தது, ஒரு தந்தையாகப் பெருமைப்பட்ட நேரம்” என்று பதிவிட்டு, விஜய்யை சந்தித்த பழைய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

SCROLL FOR NEXT