சென்னை,
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை இன்று மாலை பதிவு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது;-
“இந்த முறை தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களிடம் தேர்தல் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அரசியலில் ரீ-டேக் எடுக்க முடியாது என்று இல்லை, 5 வருடங்களுக்கு ஒருமுறை அரசியலில் ரீ-டேக் எடுக்கலாம்.
அயல்நாடுகளில் எத்தனையோ போர்கள், பிரச்சினைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. நானும் வெளிநாடுகளுக்கு சென்று வந்திருக்கிறேன். வெளிநாடுகளில் உள்ள அரசுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் நன்றாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
சிறு சிறு தவறுகள் நடக்கத்தான் செய்யும். நமது வீட்டையும், தெருவையும் நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு அரசாங்கத்தால் எல்லா விஷயத்தையும் இறங்கி செய்ய முடியாது. நாட்டை நன்றாக வைத்துக் கொள்வதில் மக்களுக்கும் பங்கு இருக்கிறது. அரசியல் செய்வதற்கு அரசு உதவியாகத்தான் இருக்கிறது, அரசியல் செய்வது உண்மையில் மக்கள்தான் என்பது எனது கருத்து.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.