பெங்களூரு,
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துனியா விஜய்யின் மகன் சாம்ராட் விஜய் மீது கடத்தல் மற்றும் தாக்குதல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
21 வயதான சாம்ராட் விஜய், பெங்களூரு கெங்கேரியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் 21 வயதான மணீஷ் கவுடா மற்றும் அவரது நண்பர்களுக்கும் சாம்ராட் விஜய்க்கும் இடையே காரில் முந்திச் சென்றது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று மதியம் கல்லூரிக்கு வந்த மணீஷ் கவுடாவை சாம்ராட் விஜய் தனது நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. காரில் வைத்து அவரை தாக்கியதாகவும், பின்னர் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் மணீஷ் கவுடாவுக்கு படுகாயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மணீஷ் கவுடா கெங்கேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் சாம்ராட் விஜய் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.