இசையமைப்பாளர் இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி இசை நிறுவனமான சரிகமா இந்தியா, டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை மீறி, தங்களுக்கு உரிமை இருப்பதாகக் கூறப்படும் பாடல்களை இளையராஜா தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், அவற்றின் மீது உரிமை கோரி வருவதாகவும் சரிகமா குற்றம்சாட்டியுள்ளது
தங்களுக்கு உரிமை உள்ள பாடல்களை பயன்படுத்துவது தொடர்பாக இளையராஜாவுக்கு எதிராக ஏற்கனவே டெல்லி ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை இளையராஜா மீறியதாக சரிகமா குற்றம்சாட்டியுள்ளது.
குறிப்பாக, ‘முரட்டுக்காளை’ படத்தில் இடம்பெற்ற ‘பொதுவாக என் மனசு தங்கம்’ பாடல் தொடர்பாக இளையராஜா உரிமை கோரி சட்ட நோட்டீஸ் அனுப்பியதாக சரிகமா தெரிவித்துள்ளது. மேலும், சில பாடல்கள் ஸ்பாட்டிபை, யூடியூப் உள்ளிட்ட தளங்களில் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவை இளையராஜா வேண்டுமென்றே மீறியதாகக் கூறிய சரிகமா, அவரது அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கி, அவற்றை விற்பனை செய்து கிடைக்கும் தொகையை சரிகமாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்த நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.
இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, இளையராஜாவிடம் பதில் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.