சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், சமீபத்தில் வெளியான 'கர' திரைப்படத்தில் நடித்திருந்தார். விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஓம்' திரைப்படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், தனுஷ் போட்டோ இடம்பெற்றிருந்த ரசிகர் மன்றக் கொடியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அந்தக் கொடியில் இடம்பெற்றிருந்த "எண்ணம்போல் தான் வாழ்க்கை" என்ற வாசகத்தைத் தொடர்ந்து, தனுஷ் தனது ரசிகர் மன்றத்திற்கு புதிய கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார் என்றும், இது அவரது அரசியல் வருகைக்கான முன்னோட்டம் என்றும் தகவல்கள் பரவின.
இந்த நிலையில், 'அர்ஜுனன் பேர் பத்து' திரைப்பட விழாவில் கலந்து கொண்ட தனுஷ் ரசிகர் மன்றத் தலைவரும், இயக்குநருமான சுப்பிரமணிய சிவா, இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "இந்தக் கொடி புதிதாக உருவாக்கப்பட்டதல்ல. கடந்த 15 ஆண்டுகளாக தனுஷ் ரசிகர் மன்றத்தினர் திருமணம், காதுகுத்து விழா, திரைப்பட வெளியீடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தோரணமாக பயன்படுத்தி வரும் அதே கொடிதான்.
இந்த ஆண்டுக்கான ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில், சில ரசிகர்கள் அந்தக் கொடியை காரில் பொருத்தும் வகையில் புதிய வடிவில் தயாரித்து கொண்டு வந்தனர். அதை நிர்வாகிகளின் கார்களில் பொருத்தியதை சிலர் புதிய கொடி அறிமுகம் என்றும், தனுஷின் அரசியல் வருகைக்கான அஸ்திவாரம் என்றும் தவறாக புரிந்துகொண்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம், தனுஷ் ரசிகர் மன்றக் கொடி தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களுக்கு சுப்பிரமணிய சிவா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
குறிப்பாக, 'திருடா திருடி' மற்றும் 'சீடன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய சுப்பிரமணிய சிவா, தனுஷின் திரைப்பயணத்தில் முக்கிய பங்காற்றிய இயக்குநர்களில் ஒருவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.