சினிமா செய்திகள்

'ராஜா ராணிக்கு பிறகு காதல் படம் இயக்க முடியவில்லை'... அட்லீ மனம் திறந்த பேச்சு

இதயம் முரளி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் அட்லீ கலந்து கொண்டு பேசினார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் அட்லீ. பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றிய அட்லீ, 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் இயக்கிய முதல் படமே மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிய 'மெர்சல், தெறி, பிகில்' என அடுத்தடுத்து படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார் இயக்குநர் அட்லீ. ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால்பதித்து, அங்கேயும் தான் ஒரு ஹிட் இயக்குநர் என்று நிரூபித்து விட்டார் அட்லீ. தற்போது அல்லு அர்ஜுனின் 22ஆவது படமான 'ராக்கா'வை இயக்கி வருகிறார்.

காதல் படத்தை இயக்க முடியவில்லை என ஏக்கம்

இந்த நிலையில், ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் உருவாகி உள்ள இதயம் முரளி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் அட்லீ கலந்து கொண்டு பேசினார். அதாவது, 'ராஜா ராணி' தான் நான் எங்கு சென்றாலும் முதலில் சொல்லப்படும் படம். அந்தப் படத்திற்குப் பிறகு விஜய்யுடன் 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' போன்ற படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் மீண்டும் ஒரு காதல் திரைப்படம் இயக்க முடியவில்லை என்ற ஏக்கம் எனக்குள் இருந்தது. அந்த உணர்வால்தான் 'இதயம் முரளி' படத்தை தயாரிக்க வேண்டும் என்று நினைத்தேன்" என்றார்.

கயாடு லோஹருக்கு அட்லீ பாராட்டு

மேலும் பேசிய அவர், "'இதயம் முரளி' என்பது இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படம். அந்தப் படத்தில் பஹத் பாசில் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் என்னையே பார்த்துக் கொள்ளலாம். நடிகை கயாடு லோஹர் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். அவர் விரைவில் தேசிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் 'நேஷனல் கிரஷ்' ஆக மாறுவார் என்று நம்புகிறேன். அதேபோல், 'பரிதாபங்கள்' சுதாகரின் மிகப்பெரிய ரசிகன் நான்தான்" என்று தெரிவித்தார்.

'இதயம் முரளி' படத்தில் அதர்வாவுடன் இணைந்து கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வருகிற 10ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.