சினிமா செய்திகள்

சிக்கலான நேரத்தில் தைரியமும், ஊக்கமும் நிச்சயம் பலன் அளிக்கும்.. அதை விட்டு விடாதீர்கள்- சினேகா

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சினேகா தன் வாழ்க்கையில் மோசமான பக்கங்களை குறிப்பிட்டு பேசினார்.

முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் சினேகா, சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ஜொலித்து வருகிறார். இது தவிர புடவை விற்பனையிலும் அசத்தி தொழில் அதிபராகவும் மிளிர்கிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சினேகா தன் வாழ்க்கையில் மோசமான பக்கங்களை குறிப்பிட்டு பேசினார்.

"சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த சமயம், ஒரு விபத்தில் சிக்கினேன். கை, கால், முதுகில் அடிபட்ட நான், எழுந்து நடக்கவே எட்டு மாதங்களுக்கு மேல் ஆகும் என டாக்டர்கள் தெரிவித்தனர். அந்த சமயம் கரு.பழனியப்பன் 'பார்த்திபன் கனவு பட கதையுடன் என்னை அணுகினார். 'நானே முடியாமல் படுத்திருக்கிறேன். என்னை கூப்பிடுகிறார்களே...', என்றேன்.

ஆனால் அவர் தைரியமாக, 'நீங்கள் நிச்சயம் எழுந்து வருவீர்கள் என்று நம்பிக்கை கொடுத்தார். அந்த ஊக்கமும், தைரியமும் எனக்கு நம்பிக்கையை அளித்தது. சிக்கலான நேரங்களில் நமக்கு அளிக்கப்படும் தைரியமும், ஊக்கமும் நிச்சயம் பலன் அளிக்கும். அதை விட்டு விடாதீர்கள்” என்று குறிப்பிட்டார்.