சினிமா செய்திகள்

தந்தை-மகன் இடையே விரிசல்?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் தகவல்

விஜய்யின் மகனும் இயக்குனருமான ஜேசன் சஞ்சய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யை ‘அன்பாலோ’ செய்துவிட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகவும் உள்ள விஜய் மீது அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததாக வெளியாகிய தகவல் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் முன்னணி நடிகை ஒருவரின் பெயரும் தொடர்புபடுத்தப்பட்டதாக கூறப்பட்டதால், வதந்திகள் மேலும் வேகமெடுத்தன. எனினும் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை.

இதனிடையே, விஜய்யின் மகனும் இயக்குனருமான ஜேசன் சஞ்சய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யை ‘அன்பாலோ’ செய்துவிட்டார் என்ற தகவலும் சமூக வலைதளங்களில் காட்டுத்தீபோல் பரவியது. இதனால் விஜய் குடும்பத்தில் பிரச்சினை வெடித்துவிட்டது என்று பேசப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த தகவல்களுக்கு விஜய் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் கணக்குகளை ஜேசன் சஞ்சய் இதுவரை பின்தொடர்ந்ததே இல்லை என்றும், அதனால் ‘அன்பாலோ’ செய்தார் என்ற தகவல் முற்றிலும் தவறானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தந்தை-மகன் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என ரசிகர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரத்தினர் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.