சென்னை,
தமிழில் வருஷம் 16 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் குஷ்பு. மும்பையை சேர்ந்த குஷ்பு 1990 களில் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்த குஷ்பு, முறைமாமன் படத்தின் இயக்குநர் சுந்தர்.சி.யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா ஆகிய இரு மகள்கள் உள்ளனர். குஷ்பு தற்போது தற்போது தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் குஷ்பு - சுந்தர்.சி தம்பதி, தங்களின் மூத்த மகள் அவந்திகா திருமணத்திற்காக தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர். விஜய்யை சந்தித்தது தொடர்பாக குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"எங்கள் குடும்பத்திற்கு மிகவும் சிறப்பானதும் மறக்க முடியாததுமான ஒரு நாளாக இன்று அமைந்தது. எங்கள் அன்பு சகோதரரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய் அவர்களை அவர்களின் இல்லத்தில் சந்தித்து, எங்கள் மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழை ஷ்ரவன் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து நேரில் வழங்கும் வாய்ப்பு கிடைத்தது.
அவரை சந்திக்கும் ஒவ்வொரு தருணமும் எங்கள் மனதில் பெருமையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது. குழந்தைகள் அவரைப் பார்த்ததில் அளவிட முடியாத மகிழ்ச்சியடைந்தனர்; பணிச்சுமைக்கும்எப்போதும் போல அதே அன்பு, பாசம் மற்றும் மனம் கவரும் புன்னகையுடன் எங்களை வரவேற்றார். அந்த அன்பான வரவேற்பு எங்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும். உங்கள் அரிய நேரம், அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு மனமார்ந்த நன்றி, சகோதரரே. அதை வார்த்தைகளால் முழுமையாக வெளிப்படுத்த முடியாது." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.