சென்னை,
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ள ‘சூர்யா 49’ படத்தில் `டிசி' பட நாயகி வாமிகா கபி நடிக்க உள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, அடுத்தடுத்து பல்வேறு முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தற்போது ஜித்து மாதவன் இயக்கும் ‘சூர்யா 47’ படத்தில் நடித்து வரும் அவர், தொடர்ந்து த.செ.ஞானவேல் இயக்கும் ‘சூர்யா 48’ படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன. அதன்படி, இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாகவும், இப்படம் தற்காலிகமாக ‘சூர்யா 49’ என அழைக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
‘சூர்யா 49’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வாமிகா கபி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘டிசி’ திரைப்படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வாமிகா கபி, சூர்யாவுடன் இணைய இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது பேசுபொருளாகியுள்ளது. எனினும், இந்த கூட்டணி தொடர்பாக படக்குழு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘சூர்யா 49’ படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில், இந்த கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. ‘ஜன நாயகன்’ படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கும் படம் என்பதாலும், சூர்யா–வாமிகா கபி கூட்டணி குறித்த தகவலாலும் ‘சூர்யா 49’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்துள்ளது.