சினிமா செய்திகள்

நடிகை ஜாக்குலின் மனுவுக்கு பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு கால அவகாசம்- டெல்லி கோர்ட்டு

பண பரிமாற்ற மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

'ரான்பாக்சி' நிறுவனத்தின் அதிபர்களான ஷிவிந்தர் சிங், மல் விந்தர் சிங் ஆகியோரின் மனைவிமார்களிடம் ரூ.200 கோடி ஏமாற்றியதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீது சட்டவி ரோத பண பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. இவ்வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டுள்ளார். அதை ரத்து செய்யக்கோரிய அவரது மனு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கிடையே, அரசுத்தரப்பு சாட்சியாக மாற விருப்பம் தெரிவித்து, ஜாக்குலின் பெர்னாண்டஸ் மனு தாக்கல் செய்திருந்தார். அதுதொடர்பாக அமலாக்கத்துறைக்கு டெல்லி கோர்ட்டு கடந்த 17-ந் தேதி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில், நேற்று டெல்லி கோர்ட்டில் நீதிபதி பிரசாந்த் சர்மா முன்பு மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறை கூடுதல் கால அவகாசம் கேட்டது. அதை ஏற்று, விசாரணையை மே 8ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.