விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாக நீண்ட காலமாக வதந்தி பரவி வருகிறது இருப்பினும், இருவரும் தங்கள் உறவு குறித்து அதிகாரபூர்வமாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட்'படங்கள் மூலம் அவர்களுக்கு இடையே உருவான நட்பு காலப்போக்கில் காதலாக மாறியுள்ளதாக திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
இதற்கிடையில், இந்த ஜோடி கடந்த அக்டோபர் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. அதில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சில நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. அந்த நிச்சயதார்த்தம் குறித்து அவர்கள் இருவரும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லையெனினும், இருவரின் கைகளிலும் ஒரே மாதிரியான மோதிரங்கள் அணிந்த புகைப்படங்கள் வெளியானது.
இந்த நிலையில், இவர்களின் திருமணம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்ப்பூர் அரண்மனையில் வருகிற 26-ம் தேதியில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், திருமண நிகழ்வை ஆவணப்படமாக தயாரித்து வெளியிட நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இதுகுறித்து விஜய் தேவரகொண்டா அல்லது ராஷ்மிகா மந்தனா தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, இந்த தகவல்கள் வதந்தியா அல்லது உண்மையா என்பது குறித்து ரசிகர்கள் உறுதியான விளக்கத்துக்காக காத்திருக்கின்றனர்.