பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது. இப்படம் முஸ்லிம்களை கெட்டவர்களாக சித்தரித்து எடுக்கப்பட்ட இந்துத்துவ பிரச்சார படம் என்று விமர்சனம் எழுந்தது. இந்து - முஸ்லிம் பிரச்சினை தூண்டுவதாக வெளியான விமர்சனத்தால் அரபு நாடுகள் இப்படத்தை வெளியிட தடை விதித்தது.
துரந்தர் படத்தின் 2 ஆம் பாகமாக ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் நேற்று (மார்ச் 19) வெளியானது. இந்த படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. ஆனால், தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ் மொழியில் படம் வெளியாகாததால், ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் நிலவுகிறது. பிற மொழிகளில் வெளியீடு தாமதமாகியுள்ளதால், ரசிகர்கள் இந்தி பதிப்பை பார்த்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், பிற மொழி பதிப்புகளுக்காக முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளுக்கான பணம் திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
‘துரந்தர் 2’ திரைப்படம் உலகளவில் முதல் நாளிலேயே ரூ.230 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் சாதனையைப் பதிவு செய்துள்ளது. இந்திய சினிமாவின் பிரமாண்ட தொடக்கமாக இத்திரைப்படம் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ‘துரந்தர் 2’ படத்தின் தமிழ் வெர்ஷன் நாளை வெளியாகவுள்ளது. இப்படம் சென்சார் பிரச்னையால் தமிழ் வெர்ஷன் வெளியாகாமல் இருந்தது.