சென்னை,
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு நேற்று தேர்தல் நடைபெற்று முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. தேர்தலில் மொத்தம் 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் களமிறங்கினர். தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தமிழக சட்டசபை தேர்தலில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆனையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள பாரதிதாசன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் முதல் நபராக நின்று தனது வாக்கினை செலுத்தினார். வெள்ளை நிற கோட் சூட்டுடன் வந்த அஜித் காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, வாக்களித்துவிட்டு வெளியே வந்த அஜித்திடம் பேட்டி எடுக்க செய்தியாளர்கள் முயன்றனர். அப்போது, ‘மாற்றம் தேவையா?’ என்று செய்தியாளர் கேட்டதற்கு ‘மாற்றம் தேவையில்லை’ என அஜித் பதில் அளித்ததாக சில ஊடகங்கள், சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதன் தொடர்ச்சியாக, “மாற்றம் தேவையில்லை என்று அஜித் கூறியதாக வெளியாகிய கருத்து குறித்து உங்கள் நிலை என்ன?” என்று செய்தியாளர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அஜித் நல்ல கருத்தையே தெரிவித்திருக்கிறார், அவருக்கு நன்றி” என்று பதிலளித்தார்.
இதுகுறித்து பின்னர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளிக்கையில், “வாக்களித்து வெளியே வந்த அஜித்குமார் எந்தவித அரசியல் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ‘மாற்றம் தேவையில்லை’ போன்ற கருத்தும் அவர் கூறவில்லை. செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, ‘பேட்டி வழங்க முடியாது’ என்ற பொருளில் அவர் பதிலளித்ததை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.