மும்பை
நடிகையை தொடர் பாலியல் வன்கொடுமை செய்த பிரபல இயக்குநர் கைது செய்யப்பட்டார்.
பாலிவுட்டில் பிரபல இயக்குநராக அறியப்படுபவர் ஷகீல் நூரானி (வயது 73). படே தில் வாலா, ஜோரு கா குலாம் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர். இந்த நிலையில், இவருக்கு எதிராக மல்வானி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளிக்கப்பட்டது.
பாலியல் வன்கொடுமை
அவர், 33 வயது நடிகை ஒருவரை போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன், மிரட்டியும் வந்துள்ளார். இதுதொடர்பாக புதிய பி.என்.எஸ். குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அந்த புகாரில், 2016-ம் ஆண்டு லோகன்ட்வாலா பகுதியில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் நூரானியை, நடிகை சந்தித்துள்ளார். அப்போது, அடுத்து ஒரு படம் எடுக்கிறேன். அது தொடர்பாக தன்னை வந்து சந்திக்கும்படி நடிகையிடம் நூரானி கூறி விட்டு சென்று விட்டார்.
பங்களாவில் குளிர்பானம்
இதனையடுத்து, மால்வனியில் உள்ள நூரானியின் பங்களாவுக்கு நடிகை சென்றுள்ளார். அப்போது, போதை மருந்து கலந்த குளிர்பானம் ஒன்றை நூரானி கொடுத்துள்ளார். அதனை வாங்கி குடித்ததும், நடிகை சுயநினைவின்றி சென்று விட்டார். பின்னர் சுயநினைவு வந்ததும், அவரிடம் நூரானி மொபைல் போனில் எடுத்த வீடியோ ஒன்றை காண்பித்துள்ளார். அதில், நடிகையை நூரானி பாலியல் வன்கொடுமை செய்த காட்சிகள் இருந்துள்ளன என கூறப்படுகிறது.
இதனை போலீசாரிடமோ, குடும்பத்தினரிடமோ கூறினால் வீடியோவை வைரலாக்கி விடுவேன் என மிரட்டியுள்ளார். அந்த வீடியோவை பயன்படுத்தி, பல்வேறு முறை நடிகையை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனுடன் தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளையும் கொடுத்துள்ளார் என புகாரில் நடிகை தெரிவித்து உள்ளார்.
போலீஸ் காவல்
இந்த வழக்கில் நூரானியை போலீசார் கைது செய்தனர். அவரை 12-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்க போரிவாலி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.