சினிமா செய்திகள்

“தாய் கிழவி’ படத்தை பாராட்டிய இயக்குனர் அட்லீ

உலகமே பாரமாகத் தோன்றும்போது, ‘தாய் கிழவி’ படம் ஒரு நம்பிக்கையைத் தருவதாக இயக்குனர் அட்லீ கூறியுள்ளார்.

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடித்துள்ள திரைப்படம் ‘தாய் கிழவி’ இன்று வெளியானது. இந்த படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவியும், டிஜிட்டல் உரிமத்தை ஜீயோ ஹாட்ஸ்டாரும் பெற்றுள்ளது.

இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளார். படத்தின் பிரீமியர் ஷோ நிகழ்ச்சியில் சூர்யா, ஜோதிகா, ஷாலினி அஜித்குமார், பிரபு, அதர்வா, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா ராஜேஷ், கே.எஸ்.ரவிகுமார், நளினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அனைவரும் படக்குழுவினரை பாராட்டினர்.

இந்த நிலையில் அட்லீ ‘தாய் கிழவி’ படம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சில நேரங்களில் உலகமே பாரமாகத் தோன்றும்போது, இந்தப் படம் ஒரு நம்பிக்கையைத் தருகிறது. எமோஷ்னலாகவும் அர்த்தமுள்ளதாகவும் மனிதநேயத்தில் வேரூன்றியும் இருக்கிறது. தயவு செய்து இப்படத்தை திரையரங்குகளில் பாருங்கள். ராதிகா மேம் சூப்பர்... சிவகார்த்திகேயன், ஹாட்ஸ் ஆஃப் மாமா. படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.