சினிமா செய்திகள்

ராணுவ வீரராக சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

‘யாத்திசை’ திரைப்படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி, பவானி ஸ்ரீ, ஷிவதா உள்ளிட்டோர் நடிப்பில் இரண்டாம் உலகப்போர் கதையில் புதிய படம் தயாராகி வருகிறது.

ஜேகே பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டிலிருந்து இடைவெளிவிட்டு நடைபெற்று வந்த நிலையில், தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போர் பின்னணியில் முழுமையாக உருவாகும் முதல் தமிழ்ப்படம் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தில் ராணுவ அதிகாரியாக சசிகுமார் நடித்துள்ளார். அசோக் செல்வன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி உள்ளன. திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.இப்படத்திற்கு சார்தக் கல்யாணி இசையமைத்துள்ளார்.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகி உள்ள இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக், டீசர், டிரெய்லர் அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது.

SCROLL FOR NEXT