இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ‘மொத ராத்திரி’ படத்தை ‘நகைச்சுவை விருந்து’ என்று பாராட்டியுள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் அனிஷ்மா கதாநாயகியாக நடித்துள்ளார். ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படம் இதுவாகும். ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.
புதிதாகத் திருமணமான ஒரு ஜோடியின் வாழ்க்கையில் நடைபெறும் காதல் மற்றும் நகைச்சுவை சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ‘மொத ராத்திரி’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பைப் பெற்றன.
ரூ 5 கோடி பட்ஜெட்டில் வெளியான ‘மொத ராத்திரி’ படம் முதல் 3 நாட்களில் ரூ.70 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது.
‘மொத ராத்திரி’ படத்தை பாராட்டி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “திரையரங்குகளில் அரங்கேறும் இந்த நகைச்சுவை விருந்தை தவறவிடாதீர்கள். நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகள் சரியான அளவில் நிறைந்து, சிறப்பாக எழுதப்பட்டு இயக்கப்பட்ட ஒரு குடும்ப நாடகம் இது. அறிமுக இயக்குநர் ராஜாகருப்பசாமி மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். புதிய நடிகர்கள் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். ரிஷிகாந்த் ஒரு அற்புதமான திறமையாளர். நான் பணியாற்றிய நடிகர்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர். அவரது ‘ஹீரோ’ பயணம் ஒரு சிறப்பான தொடக்கத்துடன் தொடங்கி இருப்பதை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் பல வெற்றிகள் வரவிருக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.