‘ஜான் ஈ மன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிதம்பரம். அப்படம், வெற்றிப் படமானதுடன் கதை ரீதியாகவும் கவனிக்கப்பட்டது.தொடர்ந்து, சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ‘மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படம் தென்னிந்தியளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழிலேயே இப்படம், ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ. 225 கோடி வசூலித்து சாதனை செய்தது.
இதனைத் தொடர்ந்து, சிதம்பரம் ‘பாலன் தி பாய்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதன் கதையை ‘ஆவேஷம்’ பட இயக்குநர் ஜித்து மாதவன் எழுதியுள்ளார். படத்திற்கு சுஷின் ஷியான் இசையமைக்க, சிஜு காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை கே.வி.என் நிறுவனம் மற்றும் தேஸ்பியன் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
‘பாலன்’ என்பது மலையாள சினிமாவின் முதல் ஒலிப்படத்தின் (1938) பெயரும் ஆகும். விகதகுமாரன் மற்றும் மார்த்தாண்ட வர்மா ஆகியவற்றிற்கு பின் மலையாளத்தில் வெளிவந்த மூன்றாவது படம் அது என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘பாலன் தி பாய்’ திரைப்படத்தின் டிரெய்லர், பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில், பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் “பாலன்” படத்தை பாராட்டிய வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில், “மலையாளத் திரையிலகில் எப்போதும் நினைவுகூறத்தக்க மிகச்சிறந்த திரைப்படமாக பாலன் இருக்கும். இது என்னுடைய உத்திரவாதம். இவ்வளவு பேரின் பங்களிப்பு மிகச்சிறப்பாக ஒன்றிணைந்துள்ளது. 2.40 மணி நேரம் கொண்ட படத்தில் எங்கும் சோர்வு இல்லை. திரையரங்கைவிட்டு வெளியேறும் போது மனதில் தங்குகிறது. நம்ப முடியாத மேஜிக்” என பிரியதர்ஷன் பாராட்டியுள்ளார். இப்படம் ஜூன் 19ம் தேதி வெளியாகவுள்ளது.