திருவண்ணாமலை,
இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வந்த ஸ்பெயின் நாட்டு சுற்றுலா பயணிகள் அவரை அடையாளம் கண்டு, ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்ட நிகழ்வு அங்கே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பிரபல திரைப்பட நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி தனது மனைவியுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்தார். தொடர்ந்து, மூலவர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன் சன்னதிகளுக்குச் சென்று, மனமுருகி நெய் தீபமேற்றி சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனைகளை மேற்கொண்டார்.
அவர்கள் கோயிலில் தரிசனம் செய்துகொண்டிருந்த போது, அங்கு ஆன்மீகச் சுற்றுப்பயணம் வந்திருந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு பயணிகள் ஆர்.ஜே.பாலாஜியை அடையாளம் கண்டுகொண்டனர். உடனடியாக அவரிடம் சென்று அன்போடு பேசிய அவர்கள், ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து மிகவும் ஆர்வமாக செல்பி புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.
சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த ஆர்.ஜே.பாலாஜியிடம், அங்கிருந்த செய்தியாளர்கள் அவரது அடுத்த திரைப்பட அப்டேட்டுகள் குறித்துக் கேள்விகள் எழுப்பினர். அதற்குப் பதிலளிப்பதைத் தவிர்த்த அவர், பக்திப் பரவசத்துடன் "ஓம் நமசிவாய" என்று மட்டும் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.