அறிவியல் கதைகளில் காலப்பயணம், கால இயந்திரம் போன்றவற்றை அடிப்படையாகக்கொண்ட கதைகள் ஏராளம். நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்துக்கோ கடந்த காலத்துக்கோ சென்று வருவதுதான் காலப்பயணம். இது அறிவியல் ஆதாரமற்ற, அதேசமயம் சுவாரஸ்யமான கற்பனைதான். இதுபோன்ற கதைகள் காமிக்ஸ் புத்தகங்கள், கார்ட்டூன் வடிவங்களில் அதிகம் வெளியாகின்றன. அப்படி ஒரு கார்ட்டூன் தொடர்தான் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ‘டோரேமான்’. இந்த தொடர் ஜப்பானிய காமிக்ஸ் வடிவமான 'மாங்கா' வடிவத்தில்தான் முதலில் வெளியானது. இன்று உலகமெங்கும் உள்ள சிறுவர்களை கவர்ந்த கார்ட்டூன் தொடராக உள்ளது இந்த டோரேமான்.
சர்வதேச அளவில் அனிமேஷன் தொடர்களின் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கார்ட்டூன் தொடர் ‘டோரேமான்’. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்ட இந்தத் தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், ‘டோரேமான்’ கார்ட்டூன் தொடரின் இயக்குநரும், அஜியாடோ அனிமேஷன் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ட்சுடோமோ ஷிபயாமா (வயது 84) கடந்த மார்ச் 6 அன்று காலமானதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. அஜியாடோ நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தச் செய்தியின் மூலம் இயக்குநர் ட்சுடோமோ ஷிபயாமா நீண்டகாலமாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதுமுள்ள டோரேமான் ரசிகர்கள் இயக்குநர் ட்சுடோமோ ஷிபயாமாவின் மறைவுக்கு இணையத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.